தலைச்சுற்றுக்கு கறிவேப்பிலை தைலம்!
பெரியோர் முதல் சிறியோர் வரை தலைவலியை உணராதவங்களே இருக்க முடியாது.. அதோடு தலைச்சுற்று வந்தால் சொல்லவே வேணாம்.. இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை நமக்கு பெரிதும் உதவுகிறது. தலைச்சுற்றை அடியோடு விரட்டும் கறிவேப்பிலை தைலம் இதோ....
கறிவேப்பிலை - 200 கிராம்
பச்சை கொத்தமல்லி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
நல்லெண்ணை - 600 கிராம்
பசுவின் பால் - 200 மில்லி
கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.
சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும். ஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.
நான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
முகவாத நோய்க்கு அருமருந்தான மாவிலங்கம்!
இந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை.
கி.மு 8-ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100-ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.
அலர்ஜிக்கு மருந்து
மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர்.
முகவாதத்தை குணமாக்கும்
குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் 'நண்டுகல் பஷ்பம்' சேர்க்க வேண்டும்.
தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை 'தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.
சிறுநீரக கற்களை வெளியேற்றும்
சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது.
பாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம்.
நன்றி: கூடல்